சனி, 12 அக்டோபர், 2013

குர்பானி -விளக்கம்

அஸ்ஸலாமு அழைக்கும்! 
இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை இறையச்சமாகும்.
நாம் செய்கின்ற நற்காரியங்களில் இறையச்சம் இருந்தால்தான்  அல்லாஹ்விடம் நற்கூலியை பெறமுடியும்.இந்த முக்கியமான அம்சத்தை நினைவூட்டும் விதமாக திகழ்வது குர்பானியாகும்.

நபி இப்ராஹீம்[அலை]அவர்களின் மகன் இஸ்மாயில்[அலை]அவர்களை 
பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்[அலை]அவர்களுக்கு
கட்டளையிட்டான்.அதை நிறை வேற்றிட தன் மகனை அழைத்து பலியிட 
துணிந்தபோது அல்லாஹ் அதை தடுத்து ஒரு ஆட்டைப் பலியிடுமாறு
கட்டளையிட்டான்.

இந்த தியாகத்தை நினைவுகூரும் மற்ற அனைவரும் பிராணியை குர்பானி 
கொடுக்க வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.இந்த விவரங்களை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது[37:101-108]
குர்பானியின் நோக்கம் இறையச்சம் மட்டுமேயாகும்.குர்பானியின் மாமிசமோ,அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை.உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது.[22:37]
உமது  இறைவனை தொழுது குர்பானி கொடுபீராக :[108:2]

உயர்ந்த நோக்கத்திற்காக கடமையாக்கப்பட்ட இந்த குர்பானியை நபி[ஸல்]
தமது வாழ்நாளில் பேணுதலுடன் கொடுத்து வந்துள்ளார்கள்.

எனவே உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டு பெருமையோ,வேறு 
காரணங்களோ இல்லாமல் தியாக மனப்பான்மையுடன் அல்லாஹ்வுக்காக 
குர்பானி கொடுக்க வேண்டும்.நாம் மனத்தூமையுடன் செய்கின்ற குர்பானியும் நற்காரியங்களும் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும் மகத்தான நற்கூலியை தரும்.

எவர்களிடம் அன்றைய செலவு போக கடன் இல்லாமல் கூடுதலாக பணம் 
இருக்கிறதோ அவர்களெல்லாம் குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானி கொடுக்க எண்ணியவர்கள் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி 
கொடுக்கும்வரை நகம் முடியை வெட்டகூடாது.
நபி[ஸல்]அவர்கள் ஆடு,மாடு,ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுத்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.எனவே இம்மூன்று பிராணிகளும் குர்பானிக்கு தகுதியானதாகும்.

குர்பானி பிராணிகள் நல்லதிடகாத்திரமானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் 
இருக்கவேண்டும்.பொதுவாக எந்த குறையும் இருக்க கூடாது.
குர்பானி பிராணிகளை வாங்கும்போது நல்ல தரமான உயர் ரகமானதை 
வாங்குவது நன்மையை அதிகரித்திடும்.
நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும்,ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும்குர்பானிகொடுத்தோம்என்றுஜாபர்[ரலி]அறிவிக்கிறார்கள்[முஸ்லிம்]
நபி[ஸல்]அவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'என்று கூறி கூர்மையான கத்தியால் அறுத்துள்ளார்கள்[புகாரி]
பெருமையை விரும்பாமல் ஏழைகளின் தேவைகளை கருதி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம்.வீண் விரயமாகாமல் இருக்கவேண்டும்.

பங்கிடுதலைப் பொறுத்தவரை யாருக்கு எத்தனை சதவிகிதம் என்றெல்லாம் 
கட்டளையிடப்படவில்லை.தர்மம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.குர்பானியின் பிராணியின் தோலையும் ஏழைகளுக்கு தர்மமாக வழங்கிடுமாறு நபி[ஸல்] கூறுகிறார்கள்[புகாரி,முஸ்லிம்]

குர்பானி கொடுத்ததும்  'யா அல்லாஹ்'   எனது இந்த குர்பானியை ஏற்றுக் 
கொள்வாயாக! என்று  துஆ செய்யலாம்.

அல்லாஹ்நம்அனைவருக்குமகுர்பானிகொடுக்கும்தகுதியையும், ஆவலையும்  தந்து அதை முறையுடன் நிறைவேற்றி அதன் பயனையும்.நன்மையையும் இறை திருப்தியையும் அடைந்து கொள்ளும் வாய்ப்பை தந்தருள்வானாக!ஆமீன்.                          

சனி, 5 அக்டோபர், 2013

நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?

"ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்து விட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்."

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல்மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.

நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

"யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்.

இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். "இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்" என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேரிலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

கனவில் கண்டால் நேரிலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.