புதன், 10 ஜூலை, 2013

ரமலான்

ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹூ தஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டதுதான் ரமலான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன.

மற்ற மாதங்களில் செய்யும் அமல்களைவிட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது. அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான்.

webdunia photoWD
’யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்‘’ என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமின் சொன்னார்கள்.இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவ மன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவ மன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!

ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜீவன்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ’நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே நிறுத்திக் கொள்ளுங்கள்!’ என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் : திர்மிதீ, இப்னுமாஜா
தக்வா (இறையச்சம்) என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்யும், தடை செய்தவகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். ’தக்வாவின் உரிய தோற்றத்தை’’ நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை.

webdunia photoWD

தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடைமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ’இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்‘’.


இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடைமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்துத் தொழ ஆரம்பித்துவிடுவர். பாவங்களில் ஈடுபடக்கூடியவர், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே அல்லாஹூ அவனது தூதர் முஹம்ம (ஸல்) அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்யும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்த்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...!

webdunia photoWD
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீல் சூத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ’நோன்பைத் தவிர ஆதமுடைய மக மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே’’ அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்கு காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ் (மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால்தான். எனவே நோன்பு விஷயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று, மற்ற எல்லா விஷயங்களிலும் எல்லா காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக...!

யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கிறாரோ அதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. யார் கெட்ட பேச்சுக்களையும் கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடியை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.